நாகர்கோவில் மே 2
வெளிநாடுகளில் அல்லது வெளியூர்களில் தங்கி படிக்கின்ற அல்லது பணிபுரிகின்ற பிள்ளைகளின் பெற்றோர்களை குறி வைத்து நடைபெறும் புதிய வகை சைபர் குற்றம்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாட்ஸ் அப்பில் ஒரு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அவரது மகன் வேறு மாநிலத்தில் உயர்கல்வி பயின்று வருகிறார் எதிர் முனையில் பேசிய நபர் தான் ஒரு போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி என்றும் உங்கள் மகன் சட்ட விரோதமாக போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக அவரை கைது செய்துள்ளோம் என்று கூறியுள்ளார். அவரது மகனின் பெயர் மற்றும் படிக்கும் கல்லூரியின் விபரத்தை சரியாக கூறியதால் அதை உண்மை என நம்பி செய்வதறியாமல் திகைத்துள்ளார். என் மகன் அவ்வாறு செய்திருக்க மாட்டான் என்று மறுத்த அந்த பெண்ணிடம் பின்னணியில் அவரது மகன் கெஞ்சி அழுவது போன்று ஆடியோவை போட்டு உங்கள் மகன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் நாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு உடனடியாக 2 லட்சம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என மிரட்டியுள்ளார். பயந்து போன அந்தப் பெண் பணத்தை ஏற்பாடு செய்து விட்டு கடைசி நேரத்தில் தனக்குத் தெரிந்த போலீஸ் அதிகாரியிடம் நடந்த விபரத்தை கூற மேற்படி அழைப்பு போலியானது என்றும் இது சைபர் கிரைம் மோசடி என்றும் தெரியவந்துள்ளது.
வேலைக்காகவோ அல்லது கல்விக்காகவோ நிறுவனங்கள், கல்வி நிலையங்களில் சேரும்போது நிரப்பப்படும் விண்ணப்ப படிவங்களில் உள்ள விபரங்கள் ஏஜெண்டுகள் அல்லது இணையதளம் வாயிலாக கசிய வாய்ப்புள்ளது என்றும் அந்த விபரங்களை வைத்துக் கொண்டு தான் மேற்படி மோசடி கும்பல் இவ்வாறு குற்ற செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்தனர் எனவே பொதுமக்கள் யாரும் இதுபோன்ற அழைப்புகள் வந்தால் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் உடனடியாக காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கவும். கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்கிறது.



