மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கிழாய் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பிரபு. இவர் 10-ஆம் வகுப்பு படித்துவந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு, 2018-ஆம் ஆண்டு நவம்பர் 12-ஆம் தேதி நள்ளிரவு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து, அச்சிறுமி மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்-2012 (போக்ஸோ) சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரபுவை கைது செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி விஜயகுமாரி பிரபுவை குற்றவாளி என தீர்மானித்து, 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் ராம.சேயோன் ஆஜரானார். இதையடுத்து குற்றவாளி பிரபு(38) கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் போக்ஸோ நீதிமன்றம் உருவாக்கப்பட்ட நான்கரை மாதங்களில் இது 6-வது தண்டனை வழங்கப்பட்ட வழக்கு என்பதும், குறுகிய காலத்தில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் அதிக தண்டனையை மயிலாடுதுறை மாவட்டம் பெற்றுத்தந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கினை தண்டனையில் முடிக்க சிறப்பாக பணியாற்றிய அரசு வழக்கறிஞர் ராம.சேயோன், அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சுகந்தி, மற்றும் போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பாராட்டினார்.



