திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மேல்நிலை இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொண்டார்
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வருவதை இன்று (03.03.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் 03.03.2025 முதல் 25.03.2025 வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வில் திருவண்ணாமலை வருவாய் மாவட்டத்தில் செய்யாறு கல்வி மாவட்டத்தில் 53 தேர்வு மையங்களும், திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 71 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு மொத்தம் 124 தேர்வு மையங்களில் 27 ஆயிரத்து 308 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இன்றையதினம் நடைபெற்ற தேர்வில் 26 ஆயிரத்து 918 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். தேர்விற்கு வருகை புரியாதவர்களின் எண்ணிக்கை 390 ஆகும்.
மேற்படி, தேர்வு மையங்களில் 132 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 132 துறை அலுவலர்கள், 135 பறக்கும் படையினர், 1624 அறைக்கண்காணிப்பாளர்கள், 636 சொல்வதை எழுதுபவர்கள், 10 தொடர்பு அலுவலர்கள், 10 மதிப்பெண் சாரிபார்க்கும் அலுவலர்கள், 124 எழுத்தர்கள் மற்றும் 124 அலுவலக உதவியாளர் என மொத்தம் 2 ஆயிரத்து 917 பேர் தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், அனைத்து தேர்வு மையங்களிலும் சுகாதாரமான குடிநீர்வசதி, கழிப்பிட வசதி மற்றும் பேருந்து வசதிகள் உட்பட அனைத்து வசதிகளும் தேர்வெழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் தரைத்தளத்திலேயே தேர்வெழுதவும், போதிய அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்காக சொல்வதை எழுதுபவர்கள் 636 நியமிக்கப்பட்டு, தேர்வுகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய போதிய காவல்துறை பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 135 பறக்கும் படை உறுப்பினர்களைக் கொண்டு தேர்வு சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்யப்படுகிறது.
இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், பள்ளி தலைமையாசிரியர் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.



