இளையான்குடி: பிப்:21
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் ஆழிமதுரை ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பில் பயின்றுவந்த சிறுமி சோபியா (வயது 8) த/பெ. சசிகுமார் மற்றும் அங்கன்வாடி மையத்தில் படித்துவந்த சிறுமி கிருஷ்மிகா (வயது 4) த/பெ.கண்ணன் ஆகிய இருவரும் காலை, பள்ளியின் எதிர்புறம் உள்ள கண்மாய்க்குச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கண்மாயில் மூழ்கி குழந்தைகள் இருவருமே இறந்துவிட்டனர்.
இதனைக் கேள்விப்பட்ட மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் பிரேதப்
பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த இளையான்குடி அரசு மருத்துவமனையில் இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஆதரவாக நின்று பணிகளை விரைவுபடுத்தினார். பிரேதப் பரிசோதனை முடிந்து குழந்தைகளின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழரசி ரவிக்குமார் குழந்தைகளின் உடல்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் குழந்தைகள் இறந்ததையடுத்து உறவினர் மற்றும் கிராம மக்கள் ஒன்றுகூடி உரிய நியாயம் வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டதைத்
தொடர்ந்து துரிதமாக நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம் இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பீஸ் கமிட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி மற்றும் மாவட்ட வருவாய்
கோட்டாட்சியர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப. மதியரசன், இளையான்குடி வட்டாட்சியர் முருகன், டிஎஸ்பி அமல எட்வின், ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் பாதிப்படைந்த குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஏற்கனவே தமிழக முதல்வர் அறிவித்த முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3, லட்சமும் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் தனது சொந்த நிதியிலிருந்து தலா 1,லட்சம் வீதம் வழங்குவதாகவும் கூறினார் .இரண்டு குடும்ப உறுப்பினர்களுக்கு தலா ஒருவருக்கு அரசு பணி வழங்கிட பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார்.