நாகர்கோவில் மே 18
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்க நிர்வாகிகளை தளவாய்சுந்தரம் எம் எல் ஏ நேரில் சந்தித்த போது கிடைத்த தகவலின் அடிப்படையில் தேன் உற்பத்தியாளர்களின் நலனை பாதுகாக்க மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் உற்பத்தி செய்யும் தேனை முழுமையாக கொள்முதல் செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தளவாய்சுந்தரம் எம் எல் ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மார்த்தாண்டத்தில் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் உற்பத்தி செய்யும் தேனுக்கு, தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளில் தனி சிறப்புகளும், பெருமையும் உண்டு. இதனை மக்கள் பெரிதும் விரும்பி வாங்கி அருந்தி பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கம், இளைஞர் கிறிஸ்தவ அமைப்பு (YMCA) வழியாக டாக். பென்சர் கேச் அவர்களால் 1924-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 25 உறுப்பினர்களுடன் மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட்டது. இத்தொழிலை நம்பி பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இவர்கள் ஆண்டு முழுவதும் இரவு, பகல் பாராமல் உழைத்து இதன் பயனாக இந்த தேன் உற்பத்தியினை செய்கிறார்கள். குறிப்பாக தேன் சேகரித்த பின் ஏழை மக்கள் வாங்கியிருந்த கடனை மீட்கவும், வாழ்வுக்கான இதர ஆதாரத்திற்கு உற்பத்தி செய்யும் தேன் சந்தைக்கு செல்லும் போது, கார்பரேட் நிறுவனங்களாலும், இடைத் தரகர்களாலும் சுரண்டப்படுகின்ற அவல நிலை தொடர்ந்து இருந்து வருகிறது.
தற்போது மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்க அலுவலகம் வெட்டுவெந்நியில் உள்ளது. இதன் தலைவராக டோராகிறிஸ்டி, செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளனர். தேன் உற்பத்தியாளர்களின் வளர்ச்சிக்காகவும், நலனுக்காகவும் இச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இச்சங்கத்தில் 2,097 உறுப்பினர்கள் உள்ளார்கள். புதிதாக 375 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளார்கள். இதற்கு தணிக்கை குழு ஆட்சேபனை தெரிவித்துள்ளது. தேன் உற்பத்தியில் வட மாநிலங்களுக்கும், மேற்கு தொடர்ச்சி மலை அமைந்திருக்கும் நமது மாவட்டத்திற்கும் சில வேறுபாடுகள் உண்டு. நமது மாவட்ட தேன் சுவையாகவும், தரம் வாய்ந்ததாகவும், சிறப்பாகவும் இருக்கும்.
கன்னியாகுமரி மாவட்ட தட்ப, வெட்ப நிலை தேன் உற்பத்திக்கு உகந்ததாக இருப்பதால் 11 மாதம் தேன் கூடுகளை தோட்டங்களில் வைத்து பராமரிப்பதன் மூலம் பிப்பரவரி, மார்ச் மாதங்கள் தேன் சீசனாக இருக்கிறது. இந்த சீசனின் போது கிடைக்கும் தேனை உற்பத்தியாளர்கள் இச்சங்கத்தில் கொடுப்பது வழக்கம். இச்சங்கத்தில் ஆண்டு தோறும் 3.5 இலட்சம் கிலோ தேன் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் சராசரியாக ஆண்டுதோறும் 10 இலட்சம் கிலோ வரை தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. குறைந்த அளவே மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தில் கொள்முதல் நடப்பதால் தேன் உற்பத்தியாளர்கள் குறைந்த விலைக்கு தேனை தனியாருக்கு விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக தேன் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் கடந்த 5 ஆண்டுகளில் இச்சங்கத்திற்கு தேன் வழங்கும் உறுப்பினர்களின் பெயர்கள் சங்க அலுவலக நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டுள்ளது. புதிதாக சேர்ந்துள்ள 375 உறுப்பினர்களில் 72 பேருக்கு தேன் கொடுப்தற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் பெயரில் இச்சங்கத்திற்கு தேன் வழங்கப்பட்டு வருகிறது. தங்களிடமும் தேனை கொள்முதல் செய்ய வேண்டும் என்பது மீதமுள்ள புதிய உறுப்பினர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான தேன் உற்பத்தியாளர்கள் உள்ளார்கள். அவர்கள் உற்பத்தி செய்யும் தேன் முழுவதையும் அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர், செயலாளர், துணை இயக்குநர் ஆகியோர் இணைந்து தேனை கொள்முதல் செய்வதில் தனி கவனம் செலுத்தி தேன் உற்பத்தியாளர்கள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளும், அங்குள்ள செயலாளரும் இணைந்து தேனை கொள்முதல் செய்வதற்கு பேச்சுவார்த்தை மூலம் முடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்மார்க் நிர்ணயம் என்பது மத்திய அரசால் நிர்ணய்க்கப்பட்டுள்ளது. வடமாநில தேனுக்கும், மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ள நம் மாவட்ட தேனுக்கும் திடத்தன்மையில் வேறுபாடுகள் உள்ளன. அக்மார்க்கின் அளவை குறைத்து தேனை கொள்முதல் செய்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேன் உற்பத்தி பாதிக்காதவாறு அரசும், நிர்வாகமும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் இணைந்து விவசாயிகளிடம் தேனை கொள்முதல் செய்ய வேண்டும்.
மேலும் நடப்பாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட தேனை முழுமையாக உறுப்பினர்களிடமிருந்து கொள்முதல் செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுத்து உறுப்பினர்களின் நலனை பாதுகாக்க வேண்டும். மேலும் மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தில் 10 இலட்சம் கிலோ தேன் சேமித்து வைப்பதற்கான வசதியை ஏற்படுத்துவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தளவாய்சுந்தரம் எம் எல் ஏ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.