மார்த்தாண்டம், ஜன. 20 –
மார்த்தாண்டம் அருகே ஆயிரம்தெங்கு பகுதியில் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது இங்கு தினசரி பூஜைகள் நடந்து வருகின்றன. நேற்று கோயிலில் சமய வகுப்பு நடந்து கொண்டிருந்தது. இதற்காக கோயில் வளாகத்தில் உள்ள அலுவலக கட்டிட அறைகள் திறக்கப்பட்டு இருந்தது.
அறையில் அம்மனுக்கு திருவிழாக் காலங்களில் அணிவிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த வெள்ளி முக அங்கி, நகைகள், பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் வெள்ளி முக அங்கியை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். அரையில் வெள்ளி அங்கி மாயமாகி இருந்ததை கண்டு கோயில் நிர்வாகிகள் தொடர்ந்து அறை முழுவதும் தேடிப் பார்த்தனர். ஆனால் வெள்ளி முக அங்கி கிடைக்கவில்லை.
அதே வேளையில் மற்ற பொருட்கள், நகைகள் அங்கு இருந்தன. இந்த வெள்ளி அங்கியை மார்த்தாண்டத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் அம்மனுக்கு நேர்ச்சை கடனாக வழங்கியதாகும். இது குறித்து கோயில் கமிட்டி தலைவர் நாகப்பன் என்பவர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


