தென் தாமரை குளம் ஜன 29
தலக்குளத்தின் கரை பகுதியில் உள்ள பனை மரங்களை தீவைத்து எரித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தென் தாமரைகுளம் பேரூராட்சி 15-வது வார்டு பா.ஜ., கவுன்சிலர் சுபாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது;
அகஸ்தீஸ்வரம் அருகே தலக்குளம் உள்ளது.இக்குளத்தின் கரையோரங்களில் சமூக ஆர்வலர்கள்,இயற்கை ஆர்வலர்கள் என பலரும் பனைமரம் உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது இப்பகுதியில் வளர்க்கப்பட்டு வரும் பத்துக்கும் மேற்பட்ட பனை மரங்கள் சிறு கன்று மரங்களாக வளர்ந்து வந்தது.கடந்த இரண்டு நாட்களாக மர்ம நபர்கள் சிலர் இந்த பனை மரம் உள்ளிட்ட மரங்களை தீயிட்டு எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.இதனால் குளத்தின் கரையில் உள்ள மரங்கள் பல எரிந்து பட்டுப்போகும் சூழலில் உள்ளது .
பனை மரங்களை வளர்க்க அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வரும் நிலையில்,இது போன்று மரங்களை தீயிட்டு எரித்த நபர்கள் யார் என்பதை கண்டு பிடித்து அவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.



