திருவட்டாறு, பிப்.2-
மேக்காமண்டபத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டின் ஜோண் (42). கண்ணனூர் ஊராட்சி கவுன்சிலரான இவர் கண்ணனூர் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் உள்ளார். சம்பவ தினம் இரவு இவரும் இவரது நண்பர்கள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சத்தியவேல் மற்றும் பிபின் ஜோஸ் ஆகியோர் சேர்ந்து அழகியமண்டபத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் உணவருந்தி விட்டு வெளியே வந்தனர். அப்போது கேரள பதிவெண் கொண்ட டெம்போ டிராவலர் ஒன்று இவர்கள் வாகனத்துக்கு இடையூறாக நின்று கொண்டிருந்தது.
டிராவலரை சற்று மாற்றி நிறுத்துமாறு இவர்கள் டிராவலர் டிரைவரிடம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தகராறு ஏற்பட்டு டிராவலரில் பயணித்த கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (41), டிரைவர் அன்சார் (48), ஜின்ஸ் (29), ஜோபி (41), ஜே. ஜினு (32), வினு (36), சனு (37), பி. ஜினு (36) ஆகிய 8 பேரும் மேற்கண்ட 3 பேரையும் தாக்கினர். இதில் சத்தியவேலின் தலையில் இண்டர்லாக் கட்டையால் அடித்து கையை உடைத்தனர். இதை தடுக்க முயன்ற கிறிஸ்டின் ஜோணின் தலையில் இரும்பு கம்பியால் அடித்தும், பெபின் ஜோசும் கல்லால் தாக்கப்பட்டார். பின்னர் அந்த கோஷ்டியினர் தப்பி ஓடினர்.
இதில் படுகாயமடைந்த கிறிஸ்டின் ஜோணும், பிபின் ஜோசும் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சத்தியவேல் படுகாயத்துடன் ஆபத்தான நிலையில் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து திருவட்டாறு போலீசில் புகார் செய்யப்பட்டது.
காங்கிரஸ் பிரமுகர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து திருவட்டாறு பகுதி காங்கிரசார் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து மார்த்தாண்டத்தில் வைத்து திருவனந்தபுரத்துக்கு தப்ப முயன்ற 8 பேரையும் கைது செய்து பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.



