திருவாரூர் ஜனவரி 10,
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் “மாசில்லா திருவாரூர், புகையில்லா போகி” விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ, கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளுக்கு முதல் நாள் போகிப்பண்டிக்கை கொண்டாடுகிறோம். பழையன கழிதல் என்பது இந்நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பங்கள், தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்துவது, பெரும்பாலும் நமது கிராமங்களில் கடைப்பிடிக்கப்படும் இப்பழக்கம் சுற்றுசூழலுக்கு பெரும் தீமையை ஏற்படுத்தாத ஒன்றாகும். தற்சமயம் போகியன்று மக்கள் டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கைப் பொருட்களையும் சேர்த்து எரிக்கையில் நச்சுப் புகைமூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல், நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் மற்றும் புற்றுநோய் உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நச்சுக்காற்றாலும், கரிப்புகையாலும் காற்று மாசுப்பட்டு நம் நகரமே கருப்பு நகரமாக மாறுகிறது. எனவே, தேவையற்ற கழிவுகளை எரித்திடவோ தெருக்களில் வீசி எறியவோ கூடாது. மேலும், தேவையற்ற கழிவுகள் மற்றும் பொருட்களை உள்ளாட்சி பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருவதாலும் மறுபயன்பாட்டிற்குரியவை, மறுசூழற்சிக்குரியவைகள், மக்கக்கூடியவைகள், மறுசூழற்சியற்றவைகள் ( நச்சுத்தன்மையற்றவைகள்) தரம் பிரித்து வழங்கிட பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பிளாஸ்டிக் பைகள் அதிகளவு பயன்படுத்தப்பட்டு, பொது இடங்களில் வீசப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதுடன் வடிகால் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் சிக்கி கழிவுநீர் செல்லவிடாமல் தேங்கி கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு விளைவிக்கிறது. எனவே, இது போன்ற செயல்களால் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிப்பதுடன் மண்வளமும் பாதிப்படைகிறதுஎனவே, பொங்கல் திருநாளை புகையில்லா பண்டிகையாக கொண்டாடிட பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்படவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்வில், மாவட்ட சுற்றுச்சுழல் பொறியாளர் இரங்கராஜ், உதவி பொறியாளர் சுதர்சன், உதவி மேலாளர் மோகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.