ஈரோடு ஜன 8
தொழிலாளர் துறையின் சார்பில் தமிழ்நாடு கட்டுமானத்தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் இந்திய தொழில்நுட்பக் கழகம் இந்திய மேலாண்மைக்கழகம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சேர்க்கை பெறும் பொழுது உரிய கல்விக்கட்டணம் தங்கும் விடுதி முழுக் கட்டணம் மற்றும் வாழ்க்கைச செலவுக்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.50,000 கல்விக்கான நிதியுதவியாக வழங்கப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தில் 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளின் உரிய கல்வி சான்றுகளுடன் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். மேலும் இத்திட்டத்தில் பயன்பெற கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் இந்திய தொழில்நுட்பக் கழகம் இந்திய மேலாண்மைக்கழகம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். அவ்வாறு உள்ள பட்சத்தில், தொழிலாளியின் அடையாள ஆவணங்கள், குழந்தைகளின் கல்வி சான்றுகள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் இணையவழியாக விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு மானியம் வழங்கப்படும். அந்த வகையில், இத்திட்டத்தின்கீழ் ஈரோடு மாவட்டத்தில் பதிவு பெற்ற 6 கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில தலா ரூ.50,000 வீதம் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் நலத்திட்ட உதவி பெற்ற கட்டுமானத் தொழிலாளி முருகன் தெரிவித்தாவது
நான் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள ஆலாங்காட்டுவலசு பகுதியில் வசித்து வருகிறேன். நான் வெல்டராக வேலை செய்து வருமானம் ஈட்டி வருகிறேன். நான் வறுமையில் கஷ்டப்பட்டாலும் எனது மகனை மருத்துவராக்கி
பொதுமக்களுக்கு சேவை புரிய படிக்க வைக்கவேண்டும் என்ற கனவு இருந்தது.
தற்பொழுது எனது மகன் விக்னேஷ்வரன் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்
மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் 2-ம் ஆண்டு பயின்று வருகிறார். கட்டுமான வேலையில் பணிபுரிந்து மிகவும் சிரமப்பட்டு தான் மருத்துவம் படிக்க வைத்து
வருகிறேன். ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத்திட்டம்)
அலுவலகம் மூலம் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு
பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில நிதியுதவி
வழங்குவது
குறித்து கேட்டறிந்தேன்.
அதன்படி எனது மகன் மருத்துவ கல்லூரியில் இரண்டாமாண்டு மருத்துவம் (எம்.பி.பி.எஸ்) பயில நிதியுதவி வேண்டி விண்ணப்பித்தேன். எனது விண்ணப்ப ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு, எனக்கு நிதியுதவியாக இந்த வருடம் ரூ.50,000 க்கான ஆணை ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் மூலம் வழங்கப்பட்டது. இத்தொகையானது எனது மகன் மருத்துவர் ஆவதற்கு மிகுந்த பயனுள்ளதாக அமைந்தது. இதன்மூலம் நானும் எனது குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக உள்ளோம். இந்த நலத்திட்ட உதவியினை வழங்கி என்னை போன்ற ஏழ்மை நிலையில் உள்ளோர்களுக்கு தங்களது குழந்தைகளை மருத்துவம் போன்ற உயர் கல்வி பயில வைக்க வேண்டுமென்ற கனவையும் வாழ்வையும் மேம்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.



