தஞ்சாவூர், செப்டம்பர் 23 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் ரூபாய் 26.18 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்களைத் திறந்து வைத்து புதிய கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
தமிழக முதலமைச்சர் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் பள்ளி கல்வித்துறை சார்பில் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டியும் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம்பட்டினம் காரையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 11 கூடுதல் வகுப்பறைகள், செண்டாங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 4 கூடுதல் வகுப்பறைகள், செல்லப்பன்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் 3 வகுப்பறைகள், வெங்கரைக்கோட்டைக்காடு அரசு
மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 5 வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி ரூபாய் 4.89 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார்.
மேலும் மாவட்டத்தில் புதுத்தெரு, துவரங்குறிச்சி, குப்பதேவன் திருபுவனம், மருங்குளம், நடுவூர், வல்லம், பட்டீஸ்வரம், திருச்சேறை, சுந்தர பெருமாள் கோவில், நாச்சியார் கோவில், பந்தநல்லூர், ஆச்சனூர், பூதலூர், ஆச்சாம்பட்டி, இராயமுண்டான்பட்டி, கன்னியா குறிச்சி ஆகிய அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், மாணவ மாணவியர்களுக்கான கழிப்பறைகள், குடிநீர் வசதி, சுற்று சுவர் கட்டிடம் கட்டுவதற்கு ரூபாய் 21.29 கோடி மதிப்பில் தமிழக முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
இதைத்தொடர்ந்து வல்லம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 98.96 லட்சம் மதிப்பில் 4 புதிய வகுப்பறை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், மக்களவை உறுப்பினர் முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி கே ஜி நீலமேகம், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



