அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
ராமநாதபுரம், டிச.13-
ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் திருப்பாலைக்குடியில் தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் டாப்கோபெட் மற்றும் மீன்வளம் மீனவர் நலத்துறை இணைந்து மீனவர்களுக்கான வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசல் விற்பனை மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனர் கஜலட்சுமி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ( ராமநாதபுரம்), இராம கருமாணிக்கம் (திருவாடானை), முருகேசன் (பரமக்குடி), ஆகியோர் முன்னிலையில் மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீனவர்களுக்கான வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசல் விற்பனை மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையத்தை துவக்கி வைத்தார். பின்னர் மீனவர்களுக்கு வரிவிலக்கு டீசல் வழங்கி பேசுகையில்:
பாக் வளைகுடா பகுதியில் கடற்பாசி வளர்க்க ஏதுவாக கடல் பகுதி இருந்து வருகின்றன. அதற்கேற்ப இப்பகுதியில் பெண்கள் கடற்பாசி வளர்க்கும் திட்டத்தை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இப்பகுதிக்கு ரூ.127.71 கோடி மதிப்பீட்டில் கடல்பாசி பூங்கா வளமாவூர் பகுதியில் அமைத்திட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருப்பாலைக்குடி அருகாமையில் உள்ள 10 மீனவர் கிராமங்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசல் விற்பனை நிலையம் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மீனவர்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு நீண்ட காலமாக பட்டா இல்லாமல் இருந்து வந்த நிலையில் உடனடியாக பட்டா வழங்க உத்தரவிட்டு பட்டா வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல் மழைக்கால நிதியாக ஐந்தாயிரம் ஆக இருந்ததை தற்போது 8000 ஆக உயர்த்தி தந்தவர் நம் தமிழக முதலமைச்சர் ஆவார். விசைப்படகுகளுக்கு மானிய விலை டீசலை ஆண்டுக்கு 18000 லிட்டரில் இருந்து 19000 லிட்டர் ஆகவும் நாட்டுப் படகுகளுக்கான மானிய விலை டீசல் ஆண்டுக்கு நான்காயிரம் லிட்டர் இருந்து நான்காயிரத்தி நானூறு லிட்டர் ஆகவும் நாட்டுப் படகுகளுக்கான மானிய விலை மண்ணெண்ணெய் ஆண்டுக்கு 3400 லிட்டர் லிருந்து 3700 லிட்டர் ஆக உயர்த்தியும் கூட்டுறவு வங்கியின் மூலம் மீனவர்களுக்கு ரூபாய் 500 கோடிகளுக்கு மேல் கடன் வழங்கி மீனவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி காட்டியவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே ஆவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து டாப்கோ பெட் நிதி ஒருங்கிணைப்பு மென்பொருள் திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்து கடற்பாசி இறக்குமதி தொடர்பாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு நிலையம் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை துவக்கி வைத்து ஆழ் கடல் மீன்பிடி படகு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சியினை அமைச்சர் துவக்கி வைத்தார்.
பின்னர் 13 பயனாளிகளுக்கு கூண்டுகளில் கடல் மீன் வளர்த்திட மானிய திட்டத்திற்கான நிதி உதவி, ஆறு மீனவ குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையானது 19 பயனாளிகளுக்கு ரூ.59.50 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் இயக்குனர் ஆறுமுகம், துணை இயக்குனர் பிரபாவதி, உதவி இயக்குனர்கள் நடராஜன், கோபிநாத், ஜெய்லானி அப்துல் காதர், ஜெயக்குமார், திருப்பாலைக்குடி ஊராட்சி மன்ற தலைவர் முகமது உமர் பாரூக் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.