தருமபுரியில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டம் தருமபுரி செங்கொடிபுரத்தில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிரைஸா மேரி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் அரசியல் விளக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாநில குழு உறுப்பினர் இரா.சிசுபாலன் ஆகியோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, வி.மாதன், எம்.முத்து, சோ.அருச்சுணன், வே.விசுவநாதன், வி.ரவி, ஆர்.மல்லிகா, ஆர்.சின்னசாமி, தி.வ.தணுசன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றன.
* தருமபுரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் பெய்ய வேண்டிய மழை சராசரி அளவைவிட மிகக் குறைவாக இந்த ஆண்டு பதிவாகியுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவ மழையின் மூலம் கிடைக்கும் மழைநீரை சேமித்து மேலாண்மை செய்திடும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஏரி, குளங்கள் வரத்துக்கால்வாய்கள் தூர்வாரப்பட வேண்டும்.
* தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் அலகட்டு மலைக் கிராமத்தில் 13 வயது சிறுமியை விஷப்பாம்புக் கடித்ததால் மருத்துவமனை இல்லாமலும் சாலை வசதி இல்லாததாலும் மலைப்பாதையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள சாலை வசதி இல்லாத, தொலைதூர மலைக் கிராமங்களில் மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்ட வசதிகள் இல்லாத நிலையில் உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் இருக்கும் வகையில் அரசு மருத்துவமனைகள் துவக்கிட வேண்டும். மலைக்கிராமங்களுக்கு சாலை வசதிகள் செய்து தரவேண்டும் ஒன்றிய அரசின் ஆட்சேபனைகளை நீக்கி உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
* பால் கொள்முதல் விலையை உயர்த்தி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திலும், தனியார் கொள்முதலிலும் அமல்படுத்த வேண்டும்.
* வருகிற டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி பாலக்கோட்டில் நடைபெறும் கட்சியின் மாவட்ட 24- ஆவது மாநாடு பேரணி- பொதுக்கூட்டத்தில் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் ஐந்தாயிரம் பேரை பங்கேற்கச் செய்வது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.