நிலக்கோட்டை மே.05
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகில் உள்ள கே.சிங்காரக்கோட்டையில் வீரம்மாள் பரமசிவம் கலைக்கல்லூரியில் 2019 முதல் 2022 வரை படித்த மாணவ மாணவியர்களுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டயங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாட்ஷா தலைமை வகித்து இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு முடித்த 1650 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் உபகார செல்வம் வரவேற்புரையாற்றி அவர் பேசுகையில் ஒவ்வொரு மாணவனும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு கல்வி பயில வேண்டும் உயர்கல்வி படிக்கும் போதே போட்டி தேர்வுகளில் அதிகம் பங்கேற்க வேண்டும் மேலும் நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் தங்களுடைய கல்வித்திறனை அதிகரிக்க வேண்டும் பொழுது போக்கு சாதனங்களில் தங்களுடைய இளமை காலத்தை வீணடிக்காமல் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார். முன்னதாக பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கலைக்கல்லூரியின் தலைவர் முனைவர் பண்ணை செல்வகுமார் கல்லூரி முன்னேற்றம் குறித்து பேசும் போது வரும் 2024 கல்வி ஆண்டு தொடக்கத்தில் பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கலைக்கல்லூரியில் இப்பகுதி கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிதாக சட்டக்கல்லூரி மற்றும் செவிலியர் மருந்து ஆளுநர் பட்டயபடிப்பும் கூடுதலாக ஏற்படுத்தி உள்ளோம் மேலும் பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கலைக்கல்லூரி பல்வேறு போட்டி தேர்வுகளை மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான பணிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த விழாவின் போது கலந்து கொண்ட மூத்த வழக்கறிஞர் பழனிவேல்ராஜா மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சட்ட ஆலோசகர் திருப்பதி காரைக்குடி நகராட்சி நிலை மன்ற வழக்கறிஞர் ராஜபாண்டியன் மற்றும் நிலக்கோட்டை காவல் துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மதுரை மாநகராட்சி செய்தி தொடர்பு அலுவலர் மகேஷ் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.



