கன்னியாகுமரி அக் 18
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட இரையுமன் துறை மீன்பிடி துறைமுகம் மற்றும் தாழ்வான பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, நேற்று ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
கன்னியாகுமரி மாவட்ட கடலோரப்பகுதி மீனவர்கள் அதிக அளவில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் உள்ளிட்ட படகுகள் மூலமாக மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வரும் அனைத்து மீனவர்களின் பாதுகாப்பு குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்ஒருபகுதியாக வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழையின் போது பல நாட்களாக தங்கியிருந்து 200 நாட்டிக்கல் தாண்டி மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக மேற்குறிப்பிட்ட பேரிடர் காலங்களில் ஏற்படும் காலநிலை மாற்றம் மற்றும் வானிலை எச்சரிக்கை போன்ற தகவல்களை பரிமாறிக்கொள்வது குறித்து கேட்டறியப்பட்டதோடு, மழை மற்றும் வானிலை முன்னெச்சரிக்கைகள் குறித்த அறிவிப்புகள் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் அறிந்து கொண்டு உடனடியாக கரைக்கு திரும்புவதற்கான மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ள மீன்வளத்துறை துணை இயக்குநர் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டது.
அத்தோடு ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் விசைப்படகுகளின் மீனவர்களுக்கு தேவையான சுத்தமான குடிநீர், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் போதுமான அளவு எரிபொருட்கள் இருப்பில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. எனவே ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் தங்களது பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.