போகலூர், அக்.16-
போகலூர் அருகில் முத்து வயல் கிராமத்தில் ஆட்டோ டிரைவர் வீட்டில் பட்டபகலில் பீரோவை உடைத்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள பதினாறரை பவுன் நகையை திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே முத்து வயல் கிராமத்தில் வசித்து வரும் ராஜகோபால் (40). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். சம்பவ நாளன்று ராஜகோபால் ஆட்டோ சவாரியில் பாம்பன் சென்று விட்டார். இவரது மனைவி சத்திரக்குடியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார். ஆட்டோ சவாரி முடித்து விட்டு மாலை 4 மணிக்கு வீட்டுக்கு வந்து வீட்டின் கதவை ராஜகோபால் திறந்து பார்த்தபோது வீட்டினுள் இருந்த பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வேகமாக அருகில் சென்று பார்த்தபோது பீரோவை மர்ம நபர்கள் உடைத்து பீரோவில் இருந்த தங்க செயின், தங்க தோடு, தங்க நெக்லஸ் என்று ரூபாய் 9 லட்சம் மதிப்புள்ள பதினாறரை பவுன் நகையை திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்திரக்குடி போலீசில் புகார் செய்தார். பட்டபகலில் வீடு புகுந்து பீரோவை உடைத்து நகை திருடிய சம்பவம் சத்திரக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்திரக்குடி போலீசார் திருட்டு குறித்து வழக்கு பதிவு செய்து பட்டபகலில் வீடு புகுந்து நகை திருடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.


