நாகர்கோவில் செப் 3
குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில், இராஜாக்கமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட சம்பகுளம், அத்திக்கடை, தெங்கம்புதூர், காரவிளை, அனந்தனார், பாம்பன்விளை ஆகிய சாணல்களையும், கணபதிபுரம், ஆலங்கோட்டை போன்ற கால்வாய்களையும் தூர் வார வலியுறுத்தியும், மின் கட்டண உயர்வு, வரி உயர்வு, விலைவாசி உயர்வு, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் அதிகரிப்பு ஆகியவற்றை கண்டித்தும் மேலகிருஷ்ணன்புதூர் சந்திப்பில் நடைபெற்ற மாபெரும் தெருமுனைப் பிரச்சாரத்தை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார். தெருமுனைப் பிரச்சார கூட்டத்திற்கு இராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வீராசாமி தலைமை வகித்தார்.
மாபெரும் தெருமுனைப் பிரச்சாரத்தை தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்து கண்டன உரையாற்றும் போது கூறியதாவது:-
இராஜாக்கமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட விவசாயிகள் சம்ப குளம் சாணல் மற்றும் அத்திக்கடவு சாணல் வழியாக வரும் தண்ணீரை கொண்டு விவசாயம் செய்து பயன் பெற்று வருகிறார்கள். சம்ப குளம் சாணல் சுமார் 12 கிலோ மீட்டரும், அத்திக்கடவு சாணல் சுமார் 10 கிலோ மீட்டர் தூரமும் உள்ளது. இந்நிலையில் பேச்சிப்பாறை அணை ஜுன் 1-ம் தேதி திறந்த பின்பும் இன்று வரை இந்த சாணல் வழியாக தண்ணீர் வராத நிலையே தொடர்கிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனைக் கருத்தில் கொண்டு சம்ப குளம் சாணல் மற்றும் அத்திக்கடவு சாணலை உடனடியாக தூர் வாரி தண்ணீர் வருவதற்கு வழிவகை செய்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக ஏற்கனவே சட்டமன்றத்தில் பேசியதோடு, சம்மந்தப்பட்ட துறை அமைச்சர் உயர் அலுவலர்களுக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டு தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
பேச்சிப்பாறை அணை திறப்பதற்கு முன்பாக மழை இல்லாத காலத்தில், சாணல்கள் மற்றும் கால்வாய்கள் தூர் வாரும் பணிகள் நடைபெறுவது வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தூர் வாரும் பணிகள் முறையாக நடைபெறாமல் அலட்சியம் காட்டப்படுகிறது. சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் இதில் கவனம் செலுத்துவதும் இல்லை. இதனால் சாணல்கள், கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் திறக்கப்படும் போது கடை நிலங்களுக்கு சென்ற சேராத நிலை இம்மாவட்டத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணமும் வழங்குவதில்லை. பறக்கையில் நெல் கொள்முதல் நிலையம் போதிய இடவசதி இல்லாமல் சிறிய நிலையிலையே உள்ளது.
இராஜாக்கமங்கலம் ஒன்றியம், தெங்கம்புதூர் பகுதி நாகர்கோவில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சுத்தமான குடிநீர் வசதியினை ஏற்படுத்தி தர வேண்டும். புத்தளம் பேரூராட்சி, தர்மபுரம் ஊராட்சி மற்றும் சுற்று வட்டார மீனவ கிராமங்களான பள்ளம், பொழிக்கரை, கேவசன்புத்தன்துறை, மணக்குடி போன்ற பகுதிகளில் எவ்வித வளர்ச்சி திட்ட பணிகளும் தி.மு.க ஆட்சியில் நடைபெறவில்லை.
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மட்டுமே மக்கள் பயன் பெறும் வகையில் குடிநீர் பிரச்சினையை கருத்தில் கொண்டு புத்தளத்தில் குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளம் பகுதியில் பல்நோக்கு கட்டிடம், நூலகம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க ஆட்சியில் அன்றைய முதலமைச்சர் எடப்பாடியார் தமிழகம் எங்கும் மினி கிளினிக் திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டத்தின் கீழ் பள்ளம், பொழிக்கரை, மணக்குடி போன்ற மீனவ கிராமங்களுக்கு மினி கிளினிக் திட்டம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. தி.மு.க ஆட்சி மக்களுக்கு நன்மை பயக்கும் இத்திட்டத்தை செயல்படாமல் முடக்கி போட்டுள்ளது.
சொத்தவிளை பீச்சினை சுற்றுலா தலமாக மாற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பீச்ரோடு முதல் சங்குதுறை பீச் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது.இவற்றை எல்லாம் சீர்படுத்தி புதிய சாலைகள் அமைத்து சுற்றுலா வளர்ச்சிக்கு அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
மேலும் தி.மு.க ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, இளைய சமுதாயத்தை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் அதிகரிப்பு, கொலை, கொள்ளை சம்பவங்கள், நிர்வாக சீர்கேடு ஆகியவற்றை சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள், பொதுக் கூட்டங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். நமது லட்சிய பயணம் மீண்டும் அ.தி.மு.க-வின் ஆட்சி மலர வேண்டும். கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும். இதுவே நமது அனைவரின் இலட்சியமாக இருக்க வேண்டும் என அவர் பேசினார்.
தெருமுனைப் பிரச்சாரத்தில் இராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் முருகன் வரவேற்று பேசினார். இராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் காட்வின் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள் சிவசெல்வராஜன், சந்துரு, ராஜன், தாணுபிள்ளை, பசிலியான் நசரேத், ராணி, சேவியர் மனோகரன், சாந்தினி பகவதியப்பன், சுகுமாரன், சுந்தரம், சுந்தர்நாத், முத்துக்குமார், ஜெயகோபால், முருகேஷ்வரன், அய்யப்பன், ஜாண்சிலின் விஜிலா, என்.எம்.செல்வகுமார், கோசலை, குமரேசன், அக்சயா கண்ணன், ரபீக், சந்திரன், பாலமுருகன், மனோகரன், சதீஷ், குமரகுரு, நீலகண்டன், சிவகந்தன், விஜயன், முத்துகுமார், ரமேஷ், ராஜ்குமார், அறிவழகன், வெற்றி செல்வன், குளோரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.