ஆக.19
திருப்பூர் கிட்ஸ் கிளப் கல்வி குழுமங்களின் சார்பில் விஜயாபுரம் புண்ணியவதி சாலையில் அமைந்துள்ள சிபிஎஸ்சி மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. மேற்படி நிகழ்ச்சிக்கு கிட்ஸ் கிளப் கல்வி குழுமங்களின் செயலாளர் நிவேதிகா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திருமதி.எஸ். லட்சுமி இ.கா.ப அவர்கள் தலைமையேற்று வாழ்த்துரை வழங்கினார்கள். முற்போக்கு சிந்தனையாளர், கதை சொல்லி திரைப்பட நடிகர், எழுத்தாளர். பவா செல்லதுரை அவர்கள் கலந்துகொண்டு வகுப்பறைக்கு வெளியே எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். மேற்படி நிகழ்ச்சியில் கிட்ஸ் கிளப் கல்வி குழுமங்களின் தலைவர் மோகன் கே கார்த்திக், தாளாளர் வினோதினி கார்த்திக், இயக்குனர் ஐஸ்வர்யா நிகில் சுரேஷ், ஆசிரியர் பாலு, பள்ளியின் முதல்வர்கள் தீபவதி, செந்தில்குமார் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பள்ளி மாணவ மாணவிகள் கருத்தரங்கில் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனர். மேற்படி நிகழ்வில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திருமதி. எஸ் லட்சுமி ஐபிஎஸ் அவர்கள் வகுப்பறைக்கு வெளியே மாணவ சமுதாயம் எப்படி சவால்களை எதிர்கொள்வது என்பது குறித்து விளக்கி பேசினார்கள்.
விழாவில் கலந்துகொண்டு எழுத்தாளர் பவா.செல்லதுரை அவர்கள் வகுப்பறைக்கு வெளியே மாணவ மாணவிகள் கல்வியை தாண்டி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது அவற்றை கற்றுணர்ந்து வாழ்வில் வெற்றியாளர்களாக சாதனையாளர்களாக வரவேண்டும் என்பது குறித்து கதைகளின் மூலம் அற்புதமான சொற்பொழிவை நிகழ்த்தினார்கள். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கதைகளை கூறிக் கொண்டே வந்த போதும் மாணவ மாணவிகள் கதையோடு இரண்டறக் கலந்து மெய்மறந்து கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள்.