ஈரோடு, செப். 15:
ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி அருகே மொக்கையன்பாளையத்தில், வீட்டிற்குள் புகுந்த சுமார் 5½ அடி நீளமுள்ள நாகப்பாம்பை விரட்ட முயன்ற வளர்ப்பு நாய், பாம்பு கடித்ததில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொக்கையன்பாளையத்தைச் சேர்ந்த சண்முகம் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டில் வளர்த்து வந்த நாய், சண்முகம் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த நாகப்பாம்பை பார்த்துள்ளது. உடனே பாம்பை நோக்கி தொடர்ந்து குரைத்ததுடன், அதனை வீட்டை விட்டு வெளியேற்றும் முயற்சியிலும் ஈடுபட்டது.
நாயின் தொடர் குரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது, நாயும் நாகப்பாம்பும் போராடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. அப்போது சுமார் 5½ அடி நீளமுள்ள நாகப்பாம்பு நாயை கொத்திய பின்னர், வீட்டில் இருந்த சிலாப்பின் அடியில் சென்று பதுங்கியது.
இதையடுத்து பாம்பு பிடிக்கும் இளைஞர் யுவராஜாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர், சிலாப்பின் அடியில் பதுங்கியிருந்த நாகப்பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் அந்தப் பாம்பு ஈரோடு வனத்துறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.
எஜமானர் வீட்டில் இல்லாத நேரத்திலும், அவரை பாதுகாக்கும் வகையில் பாம்புடன் போராடிய வளர்ப்பு நாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.



