கிருஷ்ணகிரி, செப்.04.
கிருஷ்ணகிரி பெரிய ஏரிக்கரையோரம் அமைந்துள்ள பழமைவாய்ந்த அருள்மிகு காலபைரவர் திருக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 816-ம் ஆண்டு பாலாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹுதி உள்ளிட்ட யாக பூஜைகளும், காலபைரவர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வாக சூரன்குட்டை, இராயக்கோட்டை, ஆலப்பட்டி, காத்தாடிக்குப்பம், மல்லிநாயனப்பள்ளி, வெண்ணம்பள்ளி உள்ளிட்ட 165 கிராமங்களைச் சேர்ந்த 1,008 பெண்கள் பால்குடங்களுடன் ஊர்வலமாக பங்கேற்றனர். கரகாட்டம், மயிலாட்டம், கும்மியாட்டம், சேவையாட்டம் உள்ளிட்ட கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற ஊர்வலம் கிருஷ்ணகிரி தர்மராஜா கோவிலில் இருந்து புறப்பட்டு, பல்வேறு வீதிகள் வழியாக காலபைரவர் கோவிலை வந்தடைந்தது.
தொடர்ந்து, கருவறையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ காலபைரவர் சுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கேவுநாத், முன்னாள் சபாநாயகர் டாக்டர் தம்பிதுரை, சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து ஸ்ரீ காலபைரவர் மற்றும் ஸ்ரீ சீத்த பைரவர் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. விழாவையொட்டி சுமார் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமிகளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் 165 கிராமங்களைச் சேர்ந்த ஊர் கவுண்டர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.



