நாகர்கோவில், ஆக. 29:
கன்னியாகுமரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணன்விளையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தலைமையில் நடைபெற்ற முகாமை சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ் குமார் தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு நோய் தடுப்பு, சிகிச்சை மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு வழங்கும் வகையில் 162 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்ட அமைச்சர், 9 பயனாளிகளுக்கு மாட்டுத்தீவனம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



