தென்காசி, ஆக. 29:
தென்காசி தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம், தென்காசி ரயில் நிலையம் எதிரே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில துணைத் தலைவர்கள் சேது அரிகரன், அய்யம்பெருமாள் பிள்ளை, திருமலை குமாரசாமி யாதவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் ஷேக் மைதீன், சமூக நீதிப் பேரவை மாநில மகளிர் அணி துணைத் தலைவி வழக்கறிஞர் சகிலா, மாநில வர்த்தக அணி தலைவர் தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துதல், சாதி-மத பாகுபாடின்றி உறுப்பினர் சேர்க்கையை அதிகரித்தல், உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் வகையில் பணியாற்றுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஷேக் மைதீன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தலின்படி தென் மாவட்டங்களில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த ஆயத்தக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், தென் மாவட்ட மக்களின் முக்கிய வாழ்வாதார பிரச்சனைகளில் ஒன்றான தாமிரபரணி நதியை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார். தாமிரபரணி நதியை பாதுகாக்க கடந்த 2017-ம் ஆண்டு அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகவும், சட்டமன்றத்தில் தாமிரபரணி நதியை சுத்தப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என சௌமியா அன்புமணி குரல் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய மற்றும் பேரூர் நிர்வாகிகள், மகளிரணி, இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.



