விளாத்திகுளம், ஆக. 27:
தமிழகம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, வீடுகள் கணக்கெடுக்கும் பணி கடந்த ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இப்பணிக்கான நிறைவு நாள் வரும் 30-ந் தேதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விளாத்திகுளம் பேரூராட்சி பகுதிகளிலும் கணக்கெடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக நியமிக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு பணியாளர்கள் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் தேவையான விவரங்களை சேகரித்து வருகின்றனர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் பணியாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு பொதுமக்களும் தேவையான தகவல்களை வழங்கி முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் முழுமையாக நடைபெறுவதற்கு பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு வரும் பணியாளர்களிடம் உரிய விவரங்களை வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளதால், தங்கள் வீடுகளுக்கு கணக்கெடுப்பு பணியாளர்கள் வரவில்லை என்றால் பொதுமக்கள் உடனடியாக 9385976727 அல்லது 81240 90069 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம். மக்கள் தொகை கணக்கெடுப்பில் அனைவரும் தவறாமல் பங்கேற்று முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


