கோவை, ஆக.26:
கோவையில் பிரசித்தி பெற்ற சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
ஓணம் பண்டிகையையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமிகளுக்கு புத்தாடைகள் அணிவிக்கப்பட்டன. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மேலும், சுவாமி சன்னதி முன்பு டன் கணக்கிலான வண்ணமயமான மலர்களைக் கொண்டு பிரம்மாண்டமான அத்தப்பூ கோலம் அமைக்கப்பட்டுள்ளது. கண்கவர் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அத்தப்பூ கோலம் பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மொழி பேசும் மக்கள் புத்தாடைகள் அணிந்து, குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் கோவில் முழுவதும் ஓணம் பண்டிகை உற்சாகமும், பக்தி பரவசமும் நிறைந்து காணப்படுகிறது.



