வேலூர், ஆக. 24:
வேலூர் விருபாட்சிபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு வழித்துணை விநாயகர், அங்காள பரமேஸ்வரி அம்மன், பாலமுருகன் திருக்கோயிலின் புனராவர்த்தன ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடைபெற்ற விழாவில் விக்னேஸ்வரர் பூஜை, புண்ணியாஹவாசனம், மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து காலை 10.20 மணியளவில் கோபுரம், விமானம், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் நிறைவாக பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலையில் மேளதாளம், செண்டை மேளம் மற்றும் வானவேடிக்கையுடன் விநாயகர், அம்மன், முருகன் திருவீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஆலய விழாக்குழுவினர், நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.



