திருப்பூர், 22.08.2026.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரபல ஆடை தயாரிப்பு நிறுவனமான ராம்ராஜ் காட்டன், 3,000 வேட்டிகளைப் பயன்படுத்தி ஆசியாவின் மிகப்பெரிய பூக்களத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை Asia Book of Records சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
கேரளாவின் பாரம்பரிய ஓணம் பண்டிகையின் அடையாளமான அத்தப்பூக் கோலத்தையும், தமிழர்களின் கலாச்சார அடையாளமான வேட்டியையும் இணைக்கும் வகையில் இந்த பிரம்மாண்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கொச்சியில் உள்ள தனியார் மாலில் 30 அடி விட்டத்தில் முண்டுக்களம் வடிவமைக்கப்பட்டது.
இதற்கான சாதனைச் சான்றிதழ் மற்றும் விருதை Asia Book of Records நடுவர் சஞ்சய் போலா, ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் தலைவர் நாகராஜன் அவர்களிடம் வழங்கினார்.
இதுகுறித்து ராம்ராஜ் காட்டன் தலைவர் நாகராஜன் கூறுகையில், “வேட்டி வெறும் ஆடை மட்டுமல்ல; நமது கலாச்சாரத்தின் ஓர் அங்கம். 3,000 வேட்டிகளால் இந்த முண்டுக்களத்தை உருவாக்கியதன் மூலம் பாரம்பரியத்தை புதுமையான வடிவில் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம்” என்றார்.
பாரம்பரியத்தையும் நவீனத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட முண்டுக்களம் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



