கிருஷ்ணகிரி ஆகஸ்ட் 14:
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளியான ( ஆகஸ்ட்14, 2026) அன்று தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி சென்னை சாலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபெரியமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாராவாரம் வெள்ளிக்கிழமை தோறும் அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்தக் கோயிலின் முதல் வெள்ளிக்கிழமையன்று திவ்ய ஜோதி தரிசனமும், இரண்டு மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று சிறப்பு அலங்காரமும், நான்காவது வெள்ளிக்கிழமையன்று வளையல் அலங்காரமும், ஐந்தாவது மற்றும் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று 1008 புடவை அலங்காரமும் இந்த கோயிலின் ஆடி மாத சிறப்பு அம்சமாகும். ஆடி மாதம் கடைசி வெள்ளி என்பதால், அம்மனுக்கு அதிகாலையில் அபிஷேகங்கள் மற்றும் பல வகையான பூஜைகள் நடைபெற்றன. கிருஷ்ணகிரி பகுதி மக்கள் மட்டுமின்றி, அருகில் உள்ள கிராமத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அலங்கரிக்கப்பட்டிருந்த, இந்த 1008 புடவை அலங்காரத்தை காண ஸ்ரீபெரிய மாரியம்மன் கோவிலில் குவிந்தனர். பக்தர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு 1008 புடவை அலங்காரத்தை பிரமிப்புடன் பார்த்துச் சென்றனர். பெண்கள் பலர் தங்களது நேர்த்திக்கடனை செலுத்த கோவிலுக்கும் வரும் பக்தர்களுக்கு சக்கரை பொங்கல், புளியோதரை, கூழ் உள்ளிட்டவைகளை வழங்கினார்கள். கடைசி வெள்ளிக்கிழமையான இன்று ஸ்ரீபெரியமாரியம்மனை வழிபடுவதால் சகல சௌபாக்கியங்கள், மாங்கல்ய பாக்கியம் உண்டாகி, குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும் என்பது நம்பிக்கை. மிகப்பிரமாண்டமாக 1008 புடவையால் கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டதை பார்த்த பொதுமக்கள் அனைவரும், இதை ஏற்பாடு செய்திருந்த ஆலய அறங்காவலர் முத்துக்குமார் மற்றும் ஆலய விழா குழுவினரை பாராட்டி சென்றனர். 1008 பக்தர்கள் அலங்காரத்திற்காக கொடுத்த இந்த புடவையை, மீண்டும் அவர்களுக்கே திருப்பி வழங்கப்படும் என ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி பெரியம்மாரியம்மன் கோவிலில் 1008 புடவை அலங்காரம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.



