கோவை, ஆக. 06 –
கோவை மாநகரில் சாலை விபத்துகளைக் குறைக்கவும், தலைகவசம் அணிவதன் முக்கியத்துவத்தை வாகன ஓட்டிகளிடையே வலியுறுத்தவும் கோவை மாநகர காவல் துறை தொடர்ந்து பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் படியும்,போக்குவரத்து காவல் துணை ஆணையர் வழிகாட்டுதலின்படியும், ‘உயிர்’ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தீவிர சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சரவணம்பட்டி பகுதியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கார்த்திக் தலைமையில், போக்குவரத்து காவலர்கள் மற்றும் ‘உயிர்’ அமைப்பின் தன்னார்வலர்கள் இணைந்து தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி வழியாகத் தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை இயக்கி வந்த வாகன ஓட்டிகளைத் தடுத்து நிறுத்தி,அவர்களிடம் போக்குவரத்து காவலர்கள் துரித நடவடிக்கை எடுத்தனர்.
சோதனையின் போது விழிப்புணர்வு, தலைகவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் ஆபத்துகள், விபத்தின் போது தலைகவசம் எவ்வாறு உயிரைக் காக்கிறது என்பது குறித்த விழிப்புணர்வை காவலர்கள் மற்றும் ‘உயிர்’ அமைப்பினர் எடுத்துரைத்தனர். அறிவுரைகளுடன் மட்டும் நின்றுவிடாமல், தலைகவசம் அணியாமல் விதிகளை மீறி வாகனம் ஓட்டிய நபர்களுக்கு உடனடியாக அபராதமும் விதிக்கப்பட்டது. “சாலைப் பாதுகாப்பு என்பது அபராதத்திற்காக அல்ல; உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக!”என்பதை உணர்த்தும் வகையில் இந்த விழிப்புணர்வு முகாம் அமைந்தது.
இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் கட்டாயம் தரமான தலைகவசம் அணிய வேண்டும் என்றும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைகவசம் அணிவது சட்டப்படி மற்றும் பாதுகாப்பு ரீதியாக அவசியமானது என்றும் கோவை மாநகர போக்குவரத்து காவல் துறை மீண்டும் நினைவூட்டியுள்ளது.



