நாகர்கோவில், ஆக. 03 –
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் குட்செப்பேடு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 1983-1996 ஆம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் குடும்பத்துடன் நாகர்கோவிலில் இணைந்தனர்.
இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஓமன், சவுதி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலிருந்தும், சென்னை, தூத்துக்குடி போன்ற பல்வேறு நகரங்களிலிருந்தும் முன்னாள் மாணவர்கள் சிறப்பு விடுப்பு எடுத்துக்கொண்டு குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.
மருத்துவம், பொறியியல், அறிவியல் ஆராய்ச்சி கல்வி மற்றும் பேராசிரியப் பணி எனப் பல்வேறு உயர் பொறுப்புகளில் உள்ளனர். தங்களது இந்த வளர்ச்சிக்கு ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமுமே காரணம் என நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.
வாட்ஸ்அப் குழு அமைத்து பேசத் தொடங்கிய உடனே அனைவரும் மிகுந்த உற்சாகமடைந்தோம். 30 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பை யாருமே தவறவிட விரும்பவில்லை. ஒன்றரை மாத தீவிரத் திட்டமிடலுக்குப் பிறகு வெளி நாடுகளிலிருந்தும் நண்பர்கள் திரண்டு வந்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என அவர்கள் தெரிவித்தனர்.
பள்ளி தொடங்கிய முதல் பேட்ச் மாணவர்கள் முதல் அனைவரும் தங்களது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் பங்கேற்றுள்ளது இந்த மறுசந்திப்பை மேலும் சிறப்பித்துள்ளது.



