ஈரோடு, ஜூலை 10 –
ஈரோடு மாவட்டம் பவானி பெருந்தலையூரில் உள்ள புளு ஆரா மீன்பண்ணை வளாகத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் தேசிய மீன் வளர்ப்போர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும்போது தெரிவித்ததாவது: தேசிய மீன் வளர்ப்போர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 10 ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. மீன் என்பது உயர்தர புரதச்சத்து நிறைந்த உணவு. மீன் உணவு சாப்பிடுவதினால் மன அழுத்தம், மாரடைப்பு ஆஸ்துமா, முன் கழுத்து கழலை போன்ற நோய்கள் ஏற்படுவதிலிருந்து தவிர்க்கப்படுகிறது. குறிப்பாக குழந்தைகளின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு மீன் உணவு மிகவும் அவசியமானது.
ஈரோடு மாவட்டத்தில் காவிரி, பவானி உள்ளிட்ட ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் என ஏராளமான நீர்வளங்கள் உள்ளன. அரசு மற்றும் தனியார் நீர்நிலைகளில் மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதன் மூலம் மாவட்டத்தின் மீன் உற்பத்தியை மேலும் அதிகரிக்க முடியும். கடந்த ஆண்டில் உள்நாட்டு மீன் உற்பத்தியில் இந்திய அளவில் தமிழ்நாடு 15 வது இடத்திலும், தமிழ்நாடு அளவில் ஈரோடு மாவட்டம் 1922 டன்கள் மீன்களை உற்பத்தி செய்து 24-வது இடத்திலும் உள்ளது. இந்த வளத்தை முழுமையாக பயன்படுத்தி மாவட்டத்திலும் மீன் வளர்ப்பை அதிகரிக்க வேண்டும். இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர் இத்துறையில் அதிகளவில் ஈடுபட்டு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் பல்வேறு மீன்வள மேம்பாட்டுத் திட்டங்களான பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் விவசாய கடன் அட்டை திட்டம் பிரதம மந்திரி மட்சய கிசான் சம்ரிதி சஹ்-யோஜன உள்ளிட்ட திட்டங்கள் மூலம் மீன் வளர்ப்போருக்கு நிதியுதவி, மானியம், வங்கிக் கடன், தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், மீனவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் சந்தை வாய்ப்புகளை மேம்படுத்தி வருமானத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீனவர்களின் கடின உழைப்பையும், நாட்டின் உணவுப் பாதுகாப்பில் அவர்கள் ஆற்றி வரும் மகத்தான பங்களிப்பையும் பாராட்டிய மாவட்ட ஆட்சித்தலைவர். தேசிய மீன் வளர்ப்போர் தின வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்தார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் பூர்ணசந்திரன் என்ற மீனவருக்கு சிறந்த முன்னோடி மீன்வளர்ப்போர் விருதும், சிறந்த மீனவர் கூட்டுறவு சங்கமாக பூதிமடைபுதூர் மீனவர் கூட்டுறவு சங்கமும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கினார். விழாவில் ஈரோடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெயிலானி, மீன் ஆய்வாளர் கலைவாணி. மீன்வள சார் ஆய்வாளர்கள் ஹர்சவர்த்தினி. சதீஸ், மீன் விவசாயிகள் மற்றும் மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



