வாணியம்பாடி, ஜூலை 30 –
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆற்று மேடு பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி ஆடு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை மின்வாரிய ஊழியர்கள் மூன்று நாட்களுக்கு முன்பு சீரமைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மின்மாற்றி அருகே தேங்கி நின்றிருந்த தண்ணீரை குடிக்கச் சென்ற ஆடு, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
மின்மாற்றி பழுது சரிசெய்யப்பட்ட பின்னரும் முறையான எர்த் இணைப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால், தேங்கியிருந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
இந்த சம்பவத்தில் மனித உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதது அதிர்ஷ்டவசமாக இருந்தாலும், இதேபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



