கிருஷ்ணகிரி, ஜூலை 27 –
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன், மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்குமார், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன் பாண்டியன், ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா மற்றும் அரசு துறை அலுவலர்களுடன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சமூக நீதி விடுதிகள், கூட்டுறவு நியாய விலை கடைகளை நேரில் பார்வையிட்டு உணவுத்துறை மூலம் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியத்தில் உள்ள சிறு கூட்டுறவு சிறப்புங்காடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், உள்ளிட்ட பொருள்களின் இருப்பு மற்றும் தரம் உள்ளிட்டவைகளை கேட்டறிந்தார். பின்னர் அந்தப் பகுதி பொதுமக்களிடம் நிறை குறைகளை கேட்டு அதை உடனடியாக சரி செய்திட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது கிருஷ்ணகிரி மாவட்ட பொதுவிநியோகத் திட்ட துணைப்பதிவாளர் சிவகுருநாதன், கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.சரவணன், கூட்டுறவு சார்பதிவாளர் சாந்தா, விற்பனையாளர்கள் சசிகுமார் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.



