ராமேஸ்வரம், ஜூலை 22 –
ரயில்வே லோகோ பைலட்டுகள், ரயில் மேலாளர்கள் ஆகியோர் ஓடும் தொழிலாளர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தொடர்ந்து பணியாற்றுவதால் பாதுகாப்பான ரயில் பயணத்தை உறுதி செய்ய உரிய ஓய்வு அளிக்கப் படுகிறது. நல்ல ஓய்வு எடுக்கும் வகையில் முக்கிய ரயில் நிலையங்களில் ஓடும் தொழிலாளர் ஓய்வறைகள் அமைக்கப்படுகின்றன. ராமேஸ்வரத்தில் புதிய ஓடும் தொழிலாளர் ஓய்வு அறை ரூபாய் 4.70 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த ஓய்வு அறை 610 சதுர மீட்டர் கீழ்த்தளமும் 380 சதுர மீட்டர் மேல் தளமும் கொண்டது. ஒரு நேரத்தில் 34 ஓடும் தொழிலாளர் ஓய்வு எடுக்க முடியும். பெண் ஓடும் தொழிலாளர்களுக்கு இரு படுக்கைகள் கொண்ட தனி ஓய்வறை மற்றும் ரயில் இன்ஜின் ஆய்வாளர்களுக்கான ஓய்வு அறையும் இதில் அடங்கும்.
இந்த ஓய்வு அறையை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் புதன்கிழமை (ஜூலை 22) அன்று திறந்து வைத்தார். விழாவில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா, முதன்மை எலக்ட்ரிக் இன்ஜின் பொறியாளர் என். பாலாஜி, முதுநிலை கோட்ட பொறியாளர் எம். கார்த்திக், முதுநிலை கோட்ட மின் போக்குவரத்து பொறியாளர் ஏ. ஆர். சுரேந்திரன், பகுதி கோட்ட பொறியாளர் ஸ்ரீ ஹரி பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.



