நாகர்கோவில், ஜூலை 14 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க பத்மநாபபுரம் அரண்மனை, முற்காலத் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக விளங்கிய பெருமையுடையது. இந்த அரண்மனையைச் சுற்றியுள்ள கோட்டைச் சுவர்கள் மற்றும் சுற்றுச்சுவர்கள் காலப்போக்கில் இயற்கைச் சீற்றங்களினாலும், போதிய பராமரிப்பு இல்லாததாலும் ஆங்காங்கே சேதமடைந்திருக்கின்றன. பழமை மாறாமல் பழுதடைந்த சுற்றுத்சுவர்களை புனரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று சுற்றுலா துறை அமைச்சர் ராஜேஷ்குமார் அரண்மனையை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: இந்த கோட்டைை சுற்று சுவர்களை சீரமைக்க தொல்லியல் துறையினரை திட்ட மதிப்பீடு தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத் தலைமுறையினரும் கோட்டையை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் அரண்மனையின் பாரம்பரிய கட்டுமான அமைப்பில் பயன்படுத்தப்பட்ட அதே கலவைகளைப் பயன்படுத்தி, ஒரு துளிகூட அதன் பழமை மாறமல் இந்தச் சுற்றுச்சுவர் புதுப்பிக்கப்படும். சிதிலமடைந்த பகுதிகளைக் கண்டறிந்து, கவனத்துடன் சீரமைக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என அமைச்சர் கூறினார்.
நடைபெற்ற ஆய்வில் மாவட்ட ஆட்சியர் பிரதாப், சட்டமன்ற தொகுதி உறுப்பினர் செல்லசாமி, பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) புஷ்பாதேவி, கல்குளம் வட்டாட்சியர் ராஜேஷ், பத்மநாபபுரம் நகராட்சி ஆணையர் கண்மணி, தொல்லியல் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



