கோவை, ஜூலை 13 –
கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ராயல் கேர் மருத்துவமனை சார்பில் நரம்பியல் தீவிர சிகிச்சை தொடர்பான மருத்துவ கருத்தரங்கம் நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இதில் முன்னதாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான பயிற்சி பட்டறை முகாம் நடைபெற்றது.
தொடர்ந்து இறுதி நாளில் நடைபெற்ற கருத்தரங்கில் பக்கவாதம், மூளையில் ரத்தக்கசிவு, தலையில் ஏற்பட்ட காயங்கள், மூளைச்சாவு மற்றும் உறுப்பு தானம், வலிப்பு, மூளை மற்றும் நரம்பு தொற்றுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நிபுணர் மருத்துவர்கள் உரையாற்றி மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள புதிய சிகிச்சை முறைகள் குறித்து விளக்கமளித்தனர்.
இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். முன்னதாக இதன் துவக்க விழா ராயல் கேர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும் தலைவரும் ஆன மருத்துவர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக ராம் ராஜகோபாலன் கலந்து கொண்டு கருத்தரங்கை துவக்கி வைத்தார். இதில் மருத்துவர்கள் மேத்யூ ஜோசப், சிவக்குமார், பரந்தாமன், மருத்துவமனையின் சி.ஓ.ஒ.மணி செந்தில் குமார், பொது மேலாளர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மருத்துமனை தலைவர் மாதேஸ்வரன் பேசுகையில்: மருத்துவத் துறையில் தொழில்நுட்பங்கள் தொடர்ந்து மாறி வரும் சூழலில், இதுபோன்ற கருத்தரங்குகள் மருத்துவர்களின் அறிவையும் திறமையையும் மேம்படுத்த பெரிதும் உதவுகின்றன.
மேலும், மருத்துவத் துறை சார்ந்த இத்தகைய நிகழ்வுகள் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்குவதற்கும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன என்றார்.



