நாகர்கோவில், ஜூலை 8 –
குமரி மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைத்து உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில் விபத்தில்லாத குமரி என்ற சிறப்பு திட்டத்தை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். மாவட்டத்தில் சாலை விபத்துகளை முற்றிலும் தவிர்க்கும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இளஞ்சிறார்கள் வாகனம் ஓட்டுவதற்கு எதிராக மிகக் கடுமையான எச்சரிக்கை மாவட்ட காவல்துறை விடுத்துள்ளது.
சமீப காலமாக உரிமம் பெறாத சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை ஓட்டி செல்லும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இது சாலை பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவதோடு, விபத்துகளுக்கும் காரணமாகிறது. இதை கட்டுப்படுத்த குமரி மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அது தொடர்பாக மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, 18 வயதிற்கு உட்பட்ட இளஞ்சிறார்கள் வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமானது. 18 வயதிற்கு கீழ் உள்ள இளஞ்சிறார்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 281 மற்றும் மோட்டார் வாகனச் சட்டம், பிரிவு 199A-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். மேலும், குற்றத்தின் தன்மைக்கேற்ப 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
எனவே, பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் தங்களது 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை எந்தச் சூழ்நிலையிலும் வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டாம் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கேட்டுக்கொள்கிறது. பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இதுபோன்ற சாலை விதிமீறல்களுக்கு எதிரான கண்காணிப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகள் இனிவரும் காலங்களிலும் மேலும் தீவிரப்படுத்தப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் எவ்வித பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இத்தகைய கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இனிவரும் காலங்களில் தொடர்ந்து பலப்படுத்தப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


