தஞ்சாவூர், ஜூலை 7 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூபாய் 21.84 கோடிக்கு குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் தமிழக அரசின் செயலரும், வேளாண் உற்பத்தி ஆணையருமான சங்கர் கூறினார்.
தஞ்சாவூர் அருகே ராஜேந்திரன், திருவையாறு அருகே விளாங்குடி, பாபநாசம் அருகே கணபதி அக்ரஹாரம், கும்பகோணம் அருகே சோழன் மாளிகை ஆகிய கிராமங்களில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் தொடர்பாக ஆய்வு செய்த பின்னர் தெரிவித்ததாவது: காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் டெல்டா அல்லாத மாவட்ட ங்களில் குறுவை, கார் மற்றும் சொர்ணவாரி பருவங்களில் மேற்கொள்ளப்படும் நெல் சாகுபடியை ஊக்குவிக்கவும், நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்கவும் ரூபாய் 134.83 கோடி மதிப்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு முதல்வர் அறிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் நெல் இயந்திர நடவு அல்லது நேரடி நெல் விதைப்புக்கான ஊக்கத்தொகை, உயிர் உரங்கள், நெல் நுண்ணூட்ட உரக்கலவை, விதை நெல் விநியோக மானியம் புதிதாக வெளியிடப்பட்ட நெல் ரகங்களின் சான்று விதை உற்பத்திக்கான ஊக்கத் தொகை ஆகிய இனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, குறுவை சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 54 ஆயிரத்து 600 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 21.84 கோடி மதிப்பில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே விவசாயிகள் அனைவரு ம் திட்டத்தில் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் வேளாண் உற்பத்தி ஆணையர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் ரேவதி கோட்டாட்சியர்கள் நித்யா (தஞ்சாவூர்) திருமலை (கும்பகோணம்), வேளாண்துறை இணை இயக்குனர் லட்சுமி காந்தன், துணை இயக்குனர்கள் சாருமதி (மாநில திட்டம்) அய்யம்பெருமாள் (உழவர் பயிற்சி நிலையம் ) அறவாழி, (நெல் மற்றும் சிறுதானியம்) மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாமுவேல் தோட்டக்கலை துணை இயக்குனர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



