நாகர்கோவில், ஜூலை 6 –
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 525 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளுக்கு எளிதில் தீர்வு காணும் நோக்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு செயற்கை கால் கோரி வரப்பெற்ற மனு மீது நடவடிக்கை மேற்கொண்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு ரூ.2,79,000 மதிப்பில் செயற்கை கால் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோதை, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தினேஷ் சந்திரன், துணை காவல் கண்காணிப்பாளர் பிச்சையா, துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



