திருவட்டாறு, ஏப். 2 –
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் பங்குனித்திருவிழா கடந்த மாதம் 22 ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமி வாகனத்தில் பவனி வருதல், ஹரிநாம் கீர்த்தனம், நாராயணீய பாராயணம், கதகளி, சொற்பொழிவு, பரத நாட்டியம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
9.ம் நாளான நேற்று மாலை திருவாதிரைக்களி, சிறப்பு நாதஸ்வர இன்னிசைக் கச்சேரியைத் தொடர்ந்து இரவில் கோவிலில் இருந்து கருடவாகனத்தில் ஆதிகேசவப்பெருமாளும், கிருஷ்ணசுவாமியும், எந்தவித வாத்தியக்கருவிகளும் ஒலிக்காமல் நிசப்தமாக தளியல் ஜடாதீஷ்வரர் கோவில் பகுதியில் வேட்டைக்கு எழுந்தருளினர்.
தேங்காயில் அம்பு எய்யும் வேட்டை நிகழ்ச்சி முடிந்ததும் மேள தாளம் முழங்க சிவன் கோவில், கருடாழ்வார் கோவில், பஜனை மடம், தளியல் முத்தாரம்மன் கோவில், நான்குமுனை சந்திப்பு வழியாக கோவிலுக்கு திரும்பி வந்தனர். வேட்டை முடிந்து திரும்பி வரும்போது வீடுகளிலிருந்து பக்தர்கள் மலர்களால் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்தனர்.
பின்னர் கோவிலில் உள்ளே ஆதிகேசவப் பெருமாள் விக்ரகம் கொண்டு செல்லப் பட்டதும், தேவி வாசலை அடைத்து ஆதிகேசவ பெருமாளிடம் கோபம் கொண்டு, “எங்கே சென்று திரும்புகிறீர்?” என கேள்வி கேட்கும் பாரம்பரிய நிகழ்வு நடந்தது. சுவாமி, “முத்தாரம்மன் சத்தியமா வேட்டையாடி திரும்புகிறேன்” என்று சொல்கிறார். பின்னர் தேவி சமாதானம் அடைந்து வாசல் திறந்து சுவாமியை கருவறையின் உள் அனுமதிக்கும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து கிராதம் கதகளி நடந்தது.
இன்று (ஏப்.2) காலை கோவில் தாமதமாகவே நடை திறக்கும். இன்று வேட்டை நிகழ்ச்சி நடந்ததால் கோவிலை புனிதப் படுத்தும் ” திருவிலக்கம் ” நிகழ்ச்சி காலை 11 மணிக்கும், மாலை 5.30 மணி அளவில் ஆதிகேசவப்பெருமாளும், கிருஷ்ணசாமியும் மூவாற்று முகம் ஆற்றில் ஆறாட எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் மரியாதை செய்ய, திருவிதாங்கூர் ராஜ பிரதிநிதி முன் செல்ல, பக்தர்கள் புடைசூழ ஆறாட்டுக்கு ஆற்றூர், தோட்டவாரம் வழியாக மூவாற்று முகத்துக்கு விக்ரகங்கள் கொண்டு செல்லப்பட்டு ஆறாட்டு மற்றும் பூஜைகள் நடந்தது. ஆறாட்டு முடிந்து திரும்பி வரும் சுவாமிகளுக்கு ஆற்றூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் சந்திப்பில் புஷ்பாபிஷேகத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.



