தருமபுரி, ஜூலை 04 –
தருமபுரி மாவட்டத்தில் வீடற்ற மற்றும் வாடகை வீட்டில் வசித்து வரும் பயனாளிகள் 110 பேரை தேர்வு செய்து, நல்லம்பள்ளி தாலுகா பெரியவீட்டுகொட்டாய் கிராமத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கி இடம் ஒதுக்கியது. பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட அந்த இலவச வீட்டு மனை இடத்தில், வீடு கட்ட பயனாளிகள் சென்றால், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்துக் கொண்டு, இது எங்கள் நிலம் எனக்கூறி வீடுகட்ட விடாமல் பயனாளிகளை தடுத்து வருகின்றனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அரசு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கியும், பயனாளிகள் இதுவரை வீடுகட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதேபோல் நேற்றும் சம்மந்தப்பட்ட பெரியவீட்டுகொட்டாய் கிராமத்தில், அரசு வழங்கிய இடத்தில் வீடு கட்டச் சென்ற 4 பயனாளிகளை, அதே ஊரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், அவர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு, வீடுகட்ட விடாமல் தடுத்தும், பயனாளிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தருமபுரி மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி, இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கி உள்ள இடத்தில், பயனாளிகளை வீடுகட்ட விடாமல் தடுக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பயனாளிகள் வீடு கட்டிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசிடம் இலவச வீட்டு மனை பட்டாக்கள் பெற்ற பயனாளிகள் தரப்பில் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.



