கோவை, ஜூலை 06 –
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, தபால் அனுப்பும் போராட்டம் மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமை தற்போது மிகக் கடுமையான ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த அசாதாரண சூழ்நிலையில், இந்திய அரசியல் சாசனத்தின் 143-ஆம் பிரிவின்கீழ், காவிரி தொடர்பான முக்கிய சட்ட மற்றும் அரசியல் சாசனக் கேள்விகளை மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் பரிசீலனைக்காக அனுப்புமாறு தங்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினார்.
மேலும் 1991 ஆம் ஆண்டு ஜூன் 25 அன்று காவிரி நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பை செயல்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில், கர்நாடக அரசு அரசியல் சாசனத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு முரணான சட்டத்தை இயற்றியது.
அந்தச் சூழ்நிலையில், அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் இந்திய அரசியல் சாசனத்தின் 143-ஆம் பிரிவின்கீழ் 27.07.1991 அன்று உச்சநீதிமன்றத்திடம் கருத்துரை கோரினார். அந்த நடவடிக்கை காவிரி விவகாரத்தில் மிக முக்கியமான சட்ட முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. அதன் அடிப்படையில், உச்சநீதிமன்றம் காவிரி நடுவர் மன்றத்தின் அதிகாரத்தை உறுதிப்படுத்தி, தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் தீர்ப்பளித்தது என்று கூறினார்.



