கன்னியாகுமரி, ஜூலை 6 –
கன்னியாகுமரி சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தை தளமாக கொண்டு சுமார் 350 மீன்பிடி விசைப்படகுகள் உள்ளன. இதில் சுமார் 270 விசைப்படகுகள் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்தது ஆகும். மற்ற படகுகள் சின்ன முட்டம் பகுதி சேர்ந்தவை. ஒவ்வொரு நாளும் அதிகாலை 5 மணிக்கு விசைப்படகுகள் கடலுக்கு செல்ல வேண்டும். இரவு 9 மணிக்குள் கரை திரும்ப வேண்டும். இந்த நேர கட்டுப்பாட்டை மீறி சென்றால் விசைப்படகு உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து ஏற்கனவே மீன்வளத் துறை சார்பில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சின்ன முட்டம் மீன்பிடித் துறைமுக நுழைவு வாயில் பகுதியில் விசைப்படகுகள் சென்று வர அனுமதிப்பதற்காக வழிப்பாதையில் கட்டப்பட்டுள்ள ராட்சத கயிறு அறுந்தது. இதனால் எந்த நேரத்திலும் விசைப்படகு உள்ளே வந்து விட்டு வெளியே செல்லும் நிலை ஏற்பட்டது. நுழைவுப்பகுதியில் கயிறு அறுந்து அடைப்புகள் நீங்கியது தெரிந்ததும் மீன்வளத் துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதை பயன்படுத்தி கடந்த 4ம் தேதி குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே சில விசைப்படகுகள் கடலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு அதிக அளவில் மீன்களும் கிடைத்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் இன்று திங்கள் அதிகாலை சுமார் 2 மணியளவில் 8 விசைப்படகுகள் நேர கட்டுப்பாட்டை மீறி கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளன. இது குறித்தது தகவல் கிடைத்ததும் மீன்வளத்துறை அதிகாரிகள், கடலோர காவல் படையினர் சம்பவ பகுதிக்கு வந்து சின்ன முட்டம் மீன்பிடித்துறைமுக நுழைவாயில் பகுதியில் லாக் செய்தனர்.
இதனால் மற்ற விசைப்படகுகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அதிகாலை சுமார் 5 மணியளவில் புறப்பட இருந்த விசைப்படகுகள் செல்ல முடியாதால் மீனவர்களுடைய கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் கன்னியாகுமரியை சேர்ந்த மீனவர்கள் அங்கு திரண்டு, சின்ன முட்டத்தைச் சேர்ந்த விசைப்படகுகள் தான் நேரக் கட்டுப்பாட்டை மீறி சென்றுள்ளன. எங்களை ஏன் தடுக்கிறீர்கள் என கேட்டு மீன் வளத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து, துறைமுக நுழைவு பகுதியில் உள்ள மீன் வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது கன்னியாகுமரி மற்றும் சின்ன முட்டத்தை சேர்ந்த மீனவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கோஷ்டி மோதல் வெடித்தது. மாறி மாறி இரு தரப்பினரும் தாக்க தொடங்கினார். தொடர்ந்து கற்கள் வீசியதில் சின்னமுட்டம் பகுதியில் உள்ள சில வீடுகளில் கண்ணாடிகளும் உடைந்தன.
சம்பவம் குறித்து அறிந்ததும் கன்னியாகுமரி டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசார் குவிக்கப்பட்டனர். மாவட்ட எஸ்பி ஸ்டாலின் விரைந்து சென்று மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நேரம் செல்ல பதட்டம் அதிகரித்தது. கூடுதல் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். திருநெல்வேலியில் இருந்து டிஐஜி திருநாவுக்கரசும் உடனடியாக சின்ன முட்டம் வந்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
துறைமுகத்தில் விசைப்படகு நுழைவு பகுதியில் ராட்சத கயிறு சேதம் அடைந்து இருந்தது தெரிந்ததும், மீன்வளத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் நேரக்கட்டுப்பாட்டை மீறி விசைப்படகுகள் சென்றுள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டினர். முதற்கட்டமாக ஆறு பேர் இந்த சம்பவத்தில் காயமடைந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.



