இரணியல், மே 22 –
இரணியல் அருகே உள்ள மேலகட்டிமாங்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் ஆனந்த் (22). இவர் ஆன்லைன் புக்கிங் டெலிவரி நிறுவனத்தில் மோட்டார் சைக்கிள் விநியோகம் செய்யும் வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த 11ம் தேதி பேயன்குழி சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அதிக வேகத்தில் வந்த உயர்தர மோட்டார் சைக்கிள் ஆனந்த் பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆனந்த் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று காலை ஆனந்த் பரிதாபமாக இறந்தார். இது குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



