மார்த்தாண்டம், ஜூன் 25 –
குமரி மலையோர கிராமமான ஒருநூறாம்வயல் அருகே உள்ள ஆனைக்குளம் பகுதியை சேர்ந்த ஷீலா என்பவரது கணவர் விஜயன். இவர் இன்று காலை தனது சொந்த நிலத்தில் வேலை செய்ய சென்றபோது காட்டு பன்றிகள் கூட்டம் தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.
புதருக்குள் மறைந்திருந்த காட்டு பன்றிகள் திடீரென வந்து தாக்கியதில் விஜயனின் இடது கால் முட்டியில் பலத்த உள்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் கடையால் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குமரி வனப் பகுதிகளில் சமீப காலமாக ஒரு பக்கம் காட்டு யானை அச்சுறுத்தல், மறுபக்கம் காட்டு பன்றி தொல்லை என வனவிலங்கு – மனித மோதல் இப்பகுதியில் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
வனத்துறையினர் உடனடியாக தலையிட்டு விவசாய நிலங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், வனவிலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



