தஞ்சாவூர், பிப்ரவரி 9 –
ஜல்லிக்கட்டு காளை முட்டியதால் சிகிச்சை பெற்ற வாலிபர் மூளைச் சாவு அடைந்தார். இதனையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானம் பெற்ற தன் மூலம் 5 பேர் பயன் பெற்றனர்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுக்கா எலம்பட்டி குலமங்கலம் சின்னையா (17). இவர் கடந்த பிப்ரவரி 2-ந் தேதி மாலை 4 மணி அளவில், புதுக்கோட்டை பகுதியில் ஜல்லிக்கட்டுக்கு சென்ற போது மாடு முட்டியதால் பலத்த காயம் அடைந்தார்.
இதை தொடர்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்த சின்னையா மூளைச் சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறுவது தொடர்பாக அவரது அம்மா வீரம்மாள் மற்றும் அண்ணன் செல்வகணபதி ஆகியோருக்கு டாக்டர்கள் எடுத்துரைத்தனர்.
இதனையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் அளிக்க அவரது குடும்பத்தினரும் ஒப்புதல் அளித்தனர். அதன்படி, சின்னையா உடலில் இருந்த கல்லீரல், சிறுநீரக ங்கள், கருவிழிகள், தோல் ஆகிய வை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. கல்லீரல் புதுக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும், ஒரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், கருவிழிகள் ராசா மிராசுதார் மருத்துவமனைக்கும், தோல் தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.
உடல் உறுப்புகள், தஞ்சாவூர் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் போலீஸ் உதவியுடன் விரைவாக அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து சின்னையா உடலுக்கு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பூவதி தலைமையில் அரசு இறுதி மரியாதை செய்தனர். இந்த உடல் உறுப்புகள் தானத்தின் மூலம் 5 நபர்கள் பயன் பெற்றனர்.



