நாகர்கோவில், ஜூன் 24 –
ஆசாரிப்பள்ளம் காவல் நிலையம் அருகே போலீசார் நேற்று வாகன சோதனையில் இருந்தனர். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். காலை வேளை என்பதால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்பவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பணிக்கு செல்பவர்கள், அவசர வேலைக்காக பணியிடங்கள் செல்பவர்கள் என ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பலரும் போலீஸ் சோதனையில் சிக்கி அபராதம் கட்டினர்.
இந்த நிலையில் அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்த ஒருவரையும் போலீசார் மடக்கினர். அவருக்கு அபராதம் விதிக்க அவர்கள் பைக் எண்ணை போட்டோ எடுத்தனர். அப்போது அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் யார் தெரியுமா? என்று கேட்டு வாக்குவாதம் செய்தார். இந்த சத்தம் கேட்டு அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து மற்ற போலீசார் வந்தனர்.
பின்னர் சம்பந்தப்பட்ட நபரின் பைக்கை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். அதன் பின்னர் அந்த நபர் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் என்று தெரியவந்தது. அவரிடம் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



