தஞ்சாவூர், ஜூன் 22 –
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரேவதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 510 மனுக்களை மக்கள் கலெக்டரிடம் வழங்கினார்கள். இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் ரேவதி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து சத்துணவு திட்டத்தின் கீழ் திருவிடைமருதூர் வட்டம் திருச்சேறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கருணை அடிப்படையில் சீதளா தேவி என்ப வருக்கு பணி நியமன ஆணையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் துளசிராமன் என்பவருக்கு காதொலிக்கருவியும், வருவாய்த் துறை சார்பில் வல்லத்தைச் சேர்ந்த சுந்தரி என்பவருக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாவிணையும் மாவட்ட கலெக்டர் ரேவதி வழங்கினார்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா நீச்சல் போட்டியில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாதா மாற்று த்திறனாளிகள் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்கள் மாவட்ட கலெக்டரிடம் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உதவி கலெக்டர் (பயிற்சி) சுபாஷ் கார்த்திக், துணை கலெக்டர் (பயிற்சி) கமலேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பொன்னியின் செல்வன், சமூக பாதுகாப்புத் திட்ட தனி துணை கலெக்டர் சௌமியா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



