சுசீந்திரம், ஜூன் 19 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனந்தனாறு பாசன கால்வாய் வல்லன்குமாரன்விளை பகுதியிலிருந்து பிரிந்து அத்திக்கடை கால்வாயாக கடை வரம்பு பகுதிக்கு செல்கிறது. இக்கால்வாய் தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட நங்கூரன்பிலாவிளை சைபன் வழியாக பொட்டல்- புத்தன் துறை சாலையின் அடியில் சென்று மறுபகுதிக்கு செல்கிறது.
இக்கால்வாய் தண்ணீரில் மிதந்து வரும் செடிகள் மற்றும் குப்பைகளால் அடைபட்டு தண்ணீர் மறுகால் ஏற்பட்டு அவ்வப்போது வழிந்தோடி சாலையில் செல்கிறது. இதனால் சாலையில் அரிப்பு ஏற்பட்டு பழுதடைந்து வருகிறது. மேலும் தேங்கி கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் உருவாகி சுகாதார சீர்கேடுகளால் வட்டார மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் சிபிஐ எம் கட்சியின் முன்முயற்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் தலைமையில் சீரமைப்பு பணி நடைபெற்றது. விவசாய தொழிலாளர்கள் சந்திரசேகரன், ரவி மற்றும் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடன் குப்பைகள் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டது.



