தஞ்சாவூர், ஜூன் 18 –
தஞ்சாவூரில் இடதுசாரிகள் பொது மேடையின் சார்பில் தலைமை தபால் நிலையம் அருகே நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை மதிவாணன் முன்னிலை வகித்தார். மக்கள் அதிகாரத்தின் மூத்த தலைவர் காளியப்பன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நீட் மட்டும் சிபிஎஸ்இ உள்ளிட்ட உயர்கல்வி தேர்வுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். பொது பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தை உலக தமிழர் பேரவையின் துணைத் தலைவர் அய்யனாபுரம் முருகேசன் முடித்து வைத்து பேசினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேவையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் வடிவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



