கருங்கல், ஜூன் 18 –
கருங்கல் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (52). இவர் கருங்கல் பேருந்து நிலையம் அருகே மொபைல் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஐயப்பன் அடிக்கடி வெளிநாடு சென்று வந்தார். இதனால் செல்போன் கடையை நிர்வாகிக்க தனது மைத்துனர் சுபின் என்பவரிடம் ஒப்படைத்தார். மேலும் செல்போன் கடைக்கு உரிய வங்கி கணக்கு, வங்கி காசோலைகள் உள்ளிட்ட அனைத்தையும் சுபினிடம் ஒப்படைத்துள்ளார்.
சுபினுக்கு உதவியாக கப்பியறை பகுதியை சேர்ந்த அபிஷேக் (22) என்பவர் வேலைக்கு சேர்த்துள்ளார். இது குறித்த ஐயப்பனுக்கு தகவல் தெரிவித்து, அவரும் வேலைக்கு சேர்க்க சம்மதித்துள்ளார். இந்த நிலையில் சுபின் திடீரென இறந்து விட்டார் இதை அடுத்து அபிஷேக் உதயமார்த்தாண்டத்தை சேர்ந்த சுபிஷ் (27) என்பவரை வேலைக்கு சேர்த்துள்ளதாக ஐயப்பனிடம் கூறியுள்ளார். இதை தொடர்ந்து ஐயப்பன் மாதந்தோறும் இருவருக்கும் சம்பளம் கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஐயப்பன் தற்போது ஊருக்கு வந்துள்ளார். அப்போது புதிய கார் வாங்க ஐயப்பன் தனது வங்கி பணம் பரிவர்த்தனைகளை சரி பார்த்தார். அப்போது சுபினிடம் ஒப்படைக்கப்பட்ட வங்கி காசோலையை திருடி போலி கையெழுத்து மூலம் இரண்டு வங்கிகளில் இருந்து அபிஷேக் மற்றும் சுபிஷ் ஆகியோர் சேர்ந்து ரூபாய் ஒரு கோடி பணம் எடுத்து மோசடி செய்தது தெரிய வந்தது.
இதில் அபிஷேக் ரூ.72 லட்சம் வரையும், சுபிஷ் ரூ. 24 லட்சம் வரை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களுக்கு பண மோசடிக்கு உதவி செய்ய தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் மேலாளர் சைபின் என்பவர் உதவியாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அடுத்து ஐயப்பன் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் கருங்கல் போலீசார் புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதை அடுத்து ஐயப்பன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் செல்போன் கடை உரிமையாளரிடம் ஒரு கோடி வரை மோசடி செய்ததாக சுபிஷ் என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமுறைவான அபிஷேக், சைபின் உள்ளிட்டவர்களை தேடி வருகின்றனர்.



